
திருட்டு பட்டம் கட்டப்பட்டு உறவினர்களால் அடித்து கொல்லப்பட்ட இளம்பெண்!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உறவினர்களால் திருட்டுப் பட்டம் கட்டப்பட்ட இளம்பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் 23 வயது பெண் ஒருவர் வீட்டில் நகைகளை திருடிச் சென்றதாக ஏற்பட்ட சந்தேகத்தால் உறவினர்களாலேயே சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் பிளேட் மற்றும் தடிகளால் தாக்கப்பட்டிருப்பதாவும் அவரது கூக்குரலை வெளியே கேட்காமல் இருக்க அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விட்டிருந்தனர் என்றும் பொலிஸரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் பெண்ணைக் கொன்ற உறவினர்கள் வீட்டிலிருந்து தப்பியோடிவிட்டனர்.
புதன்கிழமை அக்கம்பக்கத்தினர் அந்த வீட்டில் இரண்டு நாட்களாக இடைவிடாது பாடல்கள் சத்தமாக ஒலிப்பதைக் கேட்டு சந்தேகம் அடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
23 வயதான சமீனா, கடந்த திங்கள்கிழமை காசியாபாத் சித்தார்த் விஹாரில் உள்ள தனது உறவினர்களான ஹீனா மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீட்டிற்கு மகனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதால், சமீனா தான் அவற்றைத் திருடிச் சென்றதாக ஹீனாவும் ரமேஷும் சந்தேகித்துள்ளனர்.
இதனால், திருடியதை ஒப்புக்கொள்ளுமாறு குச்சிகள் மற்றும் கம்பிகளால் சமீனாவைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். திருட்டை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக சமீனாவின் உடலை பிளேடால் வெட்டி சித்ரவதை செய்துள்ளனர். சமீனாவின் அலறல் சத்தத்தை அக்கம்பக்கத்தினர் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக பாடலை உரக்க ஒலிக்க விட்டுள்ளனர்.
இந்தக் கொடுமையால் சமீனா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார் என்றும் உடனே ஹீனா, ரமேஷ் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள் என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பயத்தில் தப்பி ஓடிய இருவரும் உரக்க அலற விட்ட இசையை அணைக்கத் தவறிவிட்டனர். சம்பவம் நடத்த இடத்தைப் பார்வையிட்ட பொலிஸார் குற்றவாளிகளைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இளம்பெண் மீது ஏற்பட்ட திருட்டு சந்தேகத்தால் அவரது உறவினர்களே அவரைக் கொடூரமாகக் கொன்றுவிட்டு, தப்பி ஓடிய சம்பவம் காசியாபாத் சித்தார்த் விஹார் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
