திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் இம்முறையும் திட்டமிட்டபடி இடம்பெறும்

-திருகோணமலை நிருபர்-

திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் வழமைபோன்று எவ்வித இடையூறுகளும் இன்றி திட்டமிட்டபடி இடம்பெறும் என தெரியவருகின்றது.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு வருடாவருடம் இடம்பெறும் திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் இம்முறையும் திட்டமிட்டபடி இடம்பெறவுள்ளதாகவும் அதற்கு எந்த தடைகளும் இல்லை எனவும் பக்தர்கள் அது தொடர்பில் எவ்வித ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதுதொடர்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அத்துடன் கடந்த வருடத்தைவிட இம்முறை மிகவும் சிறப்பான முறையில் நகர்வலம் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை உறுப்பினர்களாக செயற்படுவதை தடைசெய்யும் வகையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் கடந்த 21 ஆம் திகதி இடைக்கால தடைவிதித்து கட்டாணை ஒன்றினை பிறப்பித்திருந்தது.

இந்நிலையிலேயே நகர்வலம் தொடர்பில் குழப்பநிலை ஏற்பட்டதாகவும் எனினும் குறித்த கட்டாணை நகர்வலத்தில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.