திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டு பெண்

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவொன்று பகிரப்பட்டுள்ளது.

மேக்னஸ் என்ற சர்வதேச தேடல் மற்றும் மீட்பு அமைப்பு இவ்வாறான தகவலை பகிர்ந்துள்ளது.

இதன்படி நாட்டுக்கு வருகை தந்த இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளமை தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்த 25 வயதுடைய டேமர் எமிடாய் (Tamar Amitai) என்ற இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியே திருகோணமலைக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

அவர் இணையவழி ஊடாக திருகோணமலையிலுள்ள ஹோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்து,  22ஆம் திகதி அங்கு சென்று தங்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

 

இதனையடுத்து, ஹோட்டலின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன சுற்றுலாப் பயணி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால்  இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணி தொடர்பில் தகவல் அறிந்தோர் +972508899698 என்ற வட்ஸ் அப் இலக்கத்திற்கு அல்லது sar@magnus.co.il மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்க முடியுமென மேக்னஸ் என்ற சர்வதேச தேடல் மற்றும் மீட்பு அமைப்பு சமூக ஊடகங்களில் பதிவொன்றை பகிர்ந்து கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்