
திடீர் மரண விசாரணை அதிகாரி பற்றாக்குறை: மக்கள் அவதி
திடீர் மரண விசாரணை அதிகாரி பற்றாக்குறையின் காரணமாக திருகோணமலை வைத்தியசாலையில் இருந்து இறந்த உடல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை வைத்தியசாலையில் மரணிக்கின்ற உடல்களை குறித்த நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் மரண விசாரணை தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொள்வதிலும் தாமதங்கள் ஏற்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையானது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொண்ட பிரதேசமாகும். திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் சிகிச்சைகளுக்காகவும், மேலதிக சிகிச்சைகளுக்காகவும் நோயாளிகள் வருகை தருகின்றார்கள். இதனால் இங்கு பதிவாகின்ற மரணங்களின் வீதம் ஏனைய பிரதேசங்களைவிட அதிகமாக காணப்படுகின்றன.
மேலும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் ஏனைய பிரதேச வைத்தியசாலைகளில் இருந்தும் இறந்த உடல்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் ஏனைய பிரதேசங்களில் இரண்டுக்கு மேற்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலைக்கு ஒரேயொரு திடீர் மரண விசாரணை அதிகாரி மாத்திரமே நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவரும் சுகவீனமடைந்த நிலையில் காணப்படுகின்றார் இதனால் இறந்த உடல்களை பெற்றுக் கொள்வதிலும் அதற்கான அவணங்களை பெற்றுக் கொள்வதிலும் மக்கள் பல்வேறுவிதமான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நாளாந்தம் அண்ணளவாக மூன்றிக்கு மேற்பட்ட மரணங்கள் பதிவாகின்றன. அத்துடன் வேறு வைத்தியசாலைகளில் இருந்தும் இறந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக இங்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் ஒரு திடீர் மரண விசாரணை அதிகாரி போதுமானதாக இல்லை. ஆகவே மேலதிகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
