தாய் எடுத்த விபரீத முடிவு : விபத்து வழக்கில் திடீர் திருப்பம்

இந்தியா – சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் பாப்பாத்தி (வயது 46). கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த மாதம் காலை சேலம் மாநகர் இரண்டாவது அக்ரஹாரம் பகுதியில் தனியார் பேருந்து மோதி பாப்பாத்தி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சேலம் நகர பொலிஸ் நிலைய பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை பொலிஸார் ஆய்வு செய்தபோதுஇ சம்பவம் நடப்பதற்கு முன்பாக நகர பகுதியில் இருந்து சென்ற பேருந்து ஒன்றில் விழுவதற்காக பாப்பாத்தி ஓடி சென்றதும், அப்போது திடீரென குறுக்கே வந்த ஒரு இருசக்கர வாகனம் அவர் மீது மோதி அவர் கீழே விழுந்ததும் பதிவாகி இருந்தது.

அதன் பிறகு இரண்டாவதாக வந்த பேருந்தின் முன்பு ஓடிச் சென்று விழும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் அவர் திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடனேயே ஓடும் பேருந்தின் முன்பு பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்தது.

விசாரணையில் வெளிவந்த உருக்கமான தகவல்:

இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர், அதில் உருக்கமான தகவல்கள் வெளியானது. கணவரை இழந்த இவர் மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். மகள் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் மகன் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். அவரது மகனுக்கு கல்லூரி கட்டணம் 45 ஆயிரம் ரூபாய் செலுத்தும் படி கல்லூரி நிர்வாகம் கூறியிருந்தது ஆனால் அந்த பணத்தை அவரால் கட்ட முடியவில்லை. இதற்காக அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கடன் கேட்டுள்ளார் ஆனால் அவருக்கு யாரும் பணம் கொடுத்து உதவவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் அவர் காணப்பட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

தூய்மை பணியாளராக பணிபுரிவதால் விபத்தில் உயிரிழந்தால், அதன் பின்னர் அரசு நிவாரணத் தொகை கிடைக்கும். மகன் படிப்புக்கு உதவி கிடைக்கும் அல்லது கருணை அடிப்படையில் தனது வேலை மகனுக்கு கிடைக்கும் என அப்போது யாரோ சிலர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இவர் ஓடும் பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும் தெரியவந்தது. இதனையடுத்து விபத்து வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். இவரின் வருமானத்தை மட்டுமே நம்பிஇ வாடகை வீட்டில் வசித்து வந்த இந்த குடும்பத்தின் எதிர்காலம் இவருடைய உயிரிழப்பால் கேள்வி குறியாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்