தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிற்கு நேர்ந்த கதி

சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த நேசராசா பனுசா (வயது -33) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 11ஆம் திகதி குறித்த பெண் பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் தனது சகோதரனுடன் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை மாதகல் – பொன்னாலை வீதியில் குறித்த பெண் தவறி திடீரென கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்