
தமிழ் முஸ்லிம் கட்சிகள் ரணிலை ஆதரிக்க வேண்டும்
-கல்முனை நிருபர்-
கோட்டாபய ராஜபக்ஸ மக்களை, ஏமாற்றி, நாட்டை நாசமாக்கி சென்று உள்ளார், கோட்டாபயவால் நாசம் ஆக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டி எழுப்பி மக்களின் வாழ்க்கையை மீட்டு தர தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே முடியும், என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தம் செய்து இருந்த தமிழ் பேசும் மூன்று பங்காளி கட்சிகள் கூட்டாக திங்கட்கிழமை அறிவித்தன.
என்.விஷ்ணுகாந்தனை செயலாளர் நாயகமாக கொண்ட இலங்கை மக்கள் தேசிய கட்சி, முபாரக் அப்துல் மஜித் மௌலவியை தலைவராக கொண்ட ஐக்கிய காங்கிரஸ் கட்சி, நடராஜா ரவிக்குமாரை தலைவராக கொண்ட புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன ஸ்ரீகொத்தாவில் ஊடக மாநாடு நடத்தின.
என்.விஷ்ணுகாந்தன் இங்கு உரையாற்றியபோது,
கோத்தாபய மக்களை ஏமாற்றி, நாட்டை நாசமாக்கி சென்று உள்ளார், மாபெரும் அரசியல் பிரளயம் இடம்பெற்று முடிந்து உள்ளது.
கோத்தாபய ஓடி தப்பிய நிலையில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்று சரியாக நாட்டையும், மக்களையும் வழி நடத்தி கொண்டிருப்பவர் ரணில் விக்கிரமசிங்கவேதான், எல்லோருக்கும் பதவி ஆசை இருக்கின்றது.
ஆனால் பிரதமர் பதவியை பொறுப்பெடுக்க மற்ற எல்லோரும் அஞ்சிய நேரத்தில் பிரதமர் பதவியை பொறுப்பெடுத்தவரும் ரணில் விக்கிரமசிங்கவே, இவர் இடைக்கால ஜனாதிபதியாக வருகின்ற பட்சத்தில் நிச்சயமாக ஒரு மீட்பராக தொடர்ந்தும் ஒளிர்வார் என்பதில் மாற்றம் கிடையாது.
தமிழ், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ரணிலை ஆதரித்து அவரை இடைக்கால ஜனாதிபதி ஆக்க வேண்டும், என்றார்.
முபாரக் அப்துல் மஜித் மௌலவி பேசியபோது,
2005, 2010, 2015 கால பகுதியில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ரணில் நல்லவராக தெரிந்தார்.
அவர் காட்டிய வழியில் ஹக்கீம் நடந்தார், ஆனால் இப்போது சஜித்துடன் நிற்கின்றார், எனவே ஹக்கீமுக்கும், சஜித்துக்கும் இடையில் இரகசிய டீல் ஒன்று இருப்பது தெரிகின்றது.
மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் ஜனாதிபதியாவது ஜனநாயகம் இல்லை என்றால் ஏன் 69 லட்சம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவரை மக்கள் விரட்ட வேண்டும்? சஜித் கூட ஜனாதிபதி தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் தான்.
அனுரகுமார திஸ்ஸாநாயக்கவும் ஜனாதிபதி தேர்தலில் மிக மோசமாக நிராகரிக்கப்பட்டவதான். அவர் போட்டியிடுவது ஜனநாயகம் இல்லை என கூற முடியுமா? எத்தனை வாக்குகள் ஆயினும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக உரிமை உண்டு.
பெருவாரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திறமையற்றவராக இருந்தால் கொஞ்சப்பேர் வாக்குகளால் எம்பியான திறமையான ஒருவரை ஜனாதிபதியாக்குவதில் என்ன பிரச்சினை? 69 லட்சத்தை விட ஒரு லட்சம் பேரால் தெரிவு செய்யப்பட்டவரை வைத்தாவது நாட்டை கட்டியெழுப்புவதே இன்றைய தேவை, என்று தெரிவித்தார்.
