தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு : குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

கடந்த 2019 -ஆம் ஆண்டில் இந்தியா – தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் 9 பேருக்கும் தரப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

……………………………………………………………

பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, அது தொடர்பான வீடியோவை வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, பொள்ளாச்சி கிழக்கு பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் 2019 பிப்ரவரி 12 ஆம் நாளன்று புகார் அளித்தார்.

இந்நிலையில், வழக்கு பதியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அதாவது 2019 மார்ச் மாதத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில், வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது . இவ்வழக்கை நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வந்தார்.

பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், 3 முறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டநிலையில், சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், அருளானந்தம், ஹரோன், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு தற்போது வெளியானது.