தமிழரசுக் கட்சியில் பெண்களை வைத்திருப்பதே “தேத்தண்ணி” போடுவதற்குத்தான் -மிதிலைச்செல்வி-(வீடியோ இணைப்பு)

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் என தன்னைத்தான் கூறிக் கொள்ளும் ஒருவரின் கருத்துக்களுக்கு சலாம் போடாத காரணத்தினால் தமிழரசு கட்சியில் நீண்ட நாள் பயணித்த ஆளுமை மிக்க பெண்களை போட்டியிட விடாமல் தடுத்தார்கள் என, தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்புக் கிளை செயலாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்தார்.

யாழில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில், தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் எனக் கூறுபவர் தமிழரசு கட்சியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு பெண்களை தேடினோம் பலரும் பின்னடிக்கிறார்கள் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டார்.

அவரது கருத்தை நான் முற்றாக மறுக்கிறேன் தமிழரசு கட்சியில் ஆளுமை மிக்க பெண்கள் இருக்கும்போது எங்கோ எல்லாம் தேடி இரு பெண்களைப் பிடித்து வந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இறக்கி உள்ளனர்.

தமிழரசு கட்சியில் இருக்கும் என்னைப் போன்ற பெண்கள் ஊடகப் பேச்சாளருக்கு சலாம் போடும் பெண்களாகவோ அல்லது தலையாட்டும் பெண்களாகவோ இருக்காத காரணத்தினால் எம்மை தேர்தலில் நிறுத்தவில்லை.

நான் முப்பது வருடங்களுக்கு மேலாக தனியார் காப்புறுத்துறையில் பல பதவி நிலைகளை வசித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளையில் பத்து வருடங்களுக்கு மேலாக பல்வேறு பதவி நிலைகளை வகித்தவள்.

தமிழரசு கட்சிக்குள் ஜனநாயகம் இல்லாத நிலையில் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி , விக்னேஸ்வரனே தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டணியில் மான் சின்னத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறேன்.

தமிழரசு கட்சியினுடைய தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஆளுமை உள்ள பலரை தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரேரித்த நிலையில் அது நடைபெறவில்லை அதனால் தலைவர் பதவியில் இருந்து விலகினேன் என வெளிப்படையாக பேசி இருந்தார்.

ஒரு தலைவரால் கட்சியில் செயல்பட முடியாத அளவுக்கு ஒரு சிலரின் செயற்பாடு அத்து மீறிய நிலையில் அந்தக் கட்சிக்குள் இருப்பது தவறு என நினைத்து என்னைப் போன்ற பலர் வெளியேறினர்.

தமிழ் தேசிய உணர்வுடன் தமிழரசு கட்சிக்குள் பயணித்தவர்கள் கட்சிக்குள் இடம்பெறும் விரும்பத்தகாத செயற்பாடுகள் காரணமாக கட்சியை இருந்து விலகுவதாக எழுத்து மூலம் கடிதங்களை அனுப்பி உள்ளனர்.

அது மட்டுமல்லாது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் பலரும் தமிழரசு கட்சியிலிருந்து விலகுவதற்கான தீர்மானங்களை எடுத்த வருகின்றனர்.

ஆகவே தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கான கட்சியாக இனியும் செயல்பட முடியாத நிலையில் தமிழரசு கட்சியின் கொள்கைகளை மாற்றியவர்கள் நிச்சயம் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்