தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும்!

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னரே இதனை அறிவித்துள்ளனர்.

19 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில், கருத்து தெரிவித்த தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், உடனடியாக அமைச்சருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவர தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதுவரை இந்த பணிப்புறக்கணிப்பை தொடருவதற்குத் தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் இ.ஜி.சி. நிரோஷன் தெரிவித்துள்ளார்.