
தன்னை வெளிப்படுத்தாமல் மறைவிலிருந்து சேவை செய்யும் மனிதாபிமானம் மிக்க நபர்!
-யாழ் நிருபர்-
தனி ஒருவரால் ஆலயம் ஒன்றிற்கு செல்வதற்கும், கடற்கரைக்கு செல்வதற்கும் பல இலட்சம் பெறுமதியில் வீதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்கு செல்கின்ற வீதி மற்றும் அங்கிருந்து கடற்கரைக்கு செல்கின்ற வீதி என்பனவே அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
சுமார் இரண்டு கிலோ மீட்டர் வரையான வீதியே இவ்வாறு ரூபா 35 இலட்சம் நிதியில் புனரமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைத்துக் கொடுக்கப்பட்ட கடற்கரைக்கு செல்லும் வீதி சுமார் 600 மீற்றர் நீளம் கொண்டது. இதில் சுமார் முந்நூறு மீற்றர் வரை 5 அடி வரை உயரமாக மண் அரண் அமைக்கப்பட்டு அதற்கு மேலாக கிரவல் இடப்பட்டே இந்த வீதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கடற்கரை வீதியில் நூறு வரையான சவுக்கு, இலுப்பை போன்ற மரங்கள் நாட்டி அதற்கு நீர் இறைத்தும் வளர்த்தும் வருகிறார்.
இதேவேளை பருத்தித்துறை பிரதேச சபையால் பொருத்தப்பட்டு சில நாட்களிலேயே செயலிழந்து போன வீதி விளக்குகளையும் சீர் செய்து கொடுத்துள்ளதுடன் 17 வீதி விளக்குகளை புதிதாக பொருத்தியும் கொடுத்துள்ளதுடன் நீண்ட தூரம் நடந்து பாடசாலைக்கு செல்கின்ற பல மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், உதிரி பாகங்கள் என்பனவும் வழங்கி கல்வி ஊக்கிவிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருவதுடன் பல்வேறு ஆன்மீக பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
இவரை மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். ஆனால் அவர் தனது பெயரையோ தன்னைப்பற்றியோ ஊடகங்களுக்கு தெரிவிப்பதை தவிர்து வருகின்றமை குறிப்பிட தக்கது.




