தன்னை பற்றி போலி செய்தி பரப்பப்படுவதாக நடிகை சிஐடி யில் முறைப்பாடு
நடிகை பெஷானி ஏகநாயக்க, சமூக வலைதளங்களில் தன்னை இலக்கு வைத்து பரப்பப்படும் போலிப் பதிவு தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.
செய்தி இணையதளம் ஒன்றின் லோகோவை மோசடியாகப் பயன்படுத்தி நதுன் ராஜபக்ச என அடையாளம் காணப்பட்ட ஒருவரால் இந்த போலிப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“இது ஒரு போலிச் செய்தி. நதுன் ராஜபக்ச என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவர் செய்தி இணையதளத்தின் லோகோவை பயன்படுத்தி போலிப் பதிவை உருவாக்கியுள்ளார். இதற்குப் பின்னால் உள்ள அவரது நோக்கம் எனக்குத் தெரியவில்லை.
இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என அந்த இணையதளம் மறுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் அந்தப் பதிவைப் பகிர்ந்தவர்கள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் நான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.
சமூக வலைதளங்களில் இந்த போலிப் பதிவைப் பகிர்ந்தவர்கள் மற்றும் கருத்துத் தெரிவித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெஷானி மேலும் நம்பிக்கை வெளியிட்டார்.
