தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில்,  தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய சந்தேகநபர்களில் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் – யாழ்ப்பாணம் வழித்தட தனியார் பேருந்தினை மறித்து, 3 பேர் கொண்ட குழுவினர், பேருந்தின் நடத்துனர் மீதும் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பாக, தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், இன்று உரும்பிராய் பகுதியில் வைத்து, யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளனர்.

கைதானவரிடம் மேற்கொள்ளப்பட்ட, ஆரம்பகட்ட விசாரணைகளில், இன்னொருவரின் தூண்டுதலின் பேரிலேயே தாங்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது

குறித்த சம்பவம் கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு கோரி, தனியார் பேருந்து சங்கத்தினர் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.