தனிச்சிங்களத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் : இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்

-யாழ் நிருபர்-

காலம் காலமாக இலங்கையில் உள்ள அரச அமைச்சுக்கள் திணைக்களங்கள் தம்மால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், அனுப்பப்படும் கடிதங்கள் போன்றவற்றை தனிச்சிங்கள மொழிகளில் அனுப்புவது இப்போது இன்னும் அதிகரித்துள்ளது.

அண்மை நாட்களில் அவசரமாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கவேண்டிய விடயங்களை தனிச் சிங்கள மொழிகளில் சுற்றறிக்கைகளாகவும், அறிவித்தல்களாகவும் வெளியிடுவது இந்நாட்டில் சிங்களவர்கள் மட்டுமே வாழ்வது என்பதனை அர்த்தப்படுத்துகின்றது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதற்காக இன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு கடிதமூலம் தயவான வேண்டுகோள் ஒன்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரால் முன் வைக்கப்பட்டுள்ளது.

இனியும் இதுபோன்ற செயற்பாடுகள் தொடருமாக இருந்தால் சட்டரீதியான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.