தகுதியுடைய அனைவரும் உள்வாங்கப்பட வேண்டும்!

-மட்டக்களப்பு நிருபர்-

உள்ளுர் கடன் மறுசீரமைப்பின் போது EPF, ETF  இல் கை வைக்கப் போவதில்லை என்றும், மத்திய வங்கி ஆளுநர் தெளிவுபடுத்தியுள்ளார். அதே வேளை தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அத்தோடு நாட்டின் கடனை மறுசீரமைப்பதும், தேவையானது என்பதிலும், நாட்டின் பொருளாதார நிலையினை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளதையும் யாரும் மறுக்க மாட்டார்கள் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களிலேயே கடன் மறுசீரமைப்பு தொடர்பான முன்னெடுப்புக்கள் எவ்வகையில் மேற்கொள்ளப்படவுள்ளது என்ற பூரணமான அறிக்கை கிடைக்கும் என நினைக்கின்றேன். அதனை ஆராய்ந்து எமது கட்சியின் தலைவர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை எடுப்பார்.

அதேவேளை ‘சமூக நலன்புரி நன்மைகள்’ திட்டத்தின் கீழ் சுமார் 152,001 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 74,213 பயனாளிகளின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பாக பலர் தமது எதிர்ப்புக்களைத் தெருவித்து வருகின்றனர். குறித்த சமூக நலன்புரி நன்மைசார் திட்டமானது நல்ல நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டதாகவும், அதனால் மக்கள் நன்மையடையும் நிலை காணப்படுகின்ற போதிலும் இது தொடர்பான தகவல் திரட்டலில் முறைப்பாடுகள் காணப்படுகின்றமையினாலேயே மீண்டும் மக்களிடம் இருந்து மேன் முறையீடுகள் கோரப்பட்டுள்ளது.

எமது நிலைப்பாடும் சமூக நலன்புரி நன்மைகளை பெறத் தகுதியுடையவர்கள் நாளாந்தம் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கின்ற மக்கள் பாதிக்கப்படுவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு விசேட தேவையுடையோர், பெண் தலைமை தாங்கும் குடும்பத்தின் நாளாந்தம் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் என பலர் இச் சமூக நலன்புரி நன்மைகள் திட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டு தகுதி இருக்கின்ற போதும் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலுள்ளமை குறித்து விசேட கவனம் செலுத்தும்படி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தகவல் சேகரிப்பின் போது குறித்த கிராமத்தினை பிரதிபலிக்கும் கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரசன்னமும், உயர் அதிகாரிகளின் வழிகாட்டலும் மேலும் செல்வாக்கு செலுத்தியிருக்கின்றார்கள்.

அதிகமான குழப்பங்களை தடுத்திருக்கலாம் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தாக இருக்கின்றது. எனினும் நடைபெற்ற தவறுகளை ஆராய்ந்து கொண்டிருக்காமல் தவறுகள் ஏற்படாமல் எவரும் பாதிக்கப்படாவண்ணம் பயனாளிகள் தெரிவு வினைத்திறன் மிக்கதாக அமைய வேண்டும் என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்