பரந்தன் முல்லைத்தீவு A35 வீதியின் முரசுமோட்டை பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு 9.00 மணியளவில் பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி சீமெந்து கற்களை ஏற்றி பயணித்த உழவு இயந்திரமும் எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.
உழவு இயந்திரத்துடன் மோதிய டிப்பர் வீதியில் குறுக்காக தடம் புரண்டது.
உழவு இயந்திரத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பயணித்திருந்த நிலையில் மூவரும் காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிப்பர் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.