
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு காசோலை வழங்கல்
-கிண்ணியா நிருபர்-
டித்வா புயலினால் திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தலா ரூ. 2 இலட்சம் பெறுமதியான காசோலைகளை வழங்கும் நிகழ்வு, மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த தலைமையில் நேற்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
இதன்போது முதல் கட்டமாக டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 19 சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தலா ரூ. 2 இலட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 300 சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான கொடுப்பனவுகள் அடுத்த கட்டங்களில் வழங்கப்படவுள்ளன.
ஆரம்ப நிகழ்வில், பிரதேச செயலகங்களின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 19 பயனாளிகள் காசோலைகளை பெற்றுக்கொண்டனர்.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர் என். பிரளாநாவன், துறைசார்ந்த அதிகாரிகள், மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.]




