ஜப்பானின் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு இடைக்காலப் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு!

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாச்சி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைக்காலப் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆசியப் பிராந்தியத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையை கலைப்பதற்கான கடிதத்தை சபாநாயகர் இன்று வாசித்தார்.

இதன்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பாரம்பரியமான “பான்சாய்” கோஷங்களை எழுப்பி இதனை வரவேற்றனர்.

எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ளதுடன், ஜனவரி 27 முதல் 12 நாட்களுக்கு உத்தியோகபூர்வ பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும்.

கடந்த அக்டோபர் மாதம் பிரதமராகப் பதவியேற்ற சனே தகாச்சி, வெறும் மூன்று மாதங்களிலேயே தேர்தலை எதிர்கொள்கிறார்.

தற்போது அவருக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு காணப்படுவதால், அந்த செல்வாக்கை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் தனது தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (Liberal Democratic Party) பலத்தை அதிகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.