ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு : ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட தகவல்!

ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு : ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட தகவல்!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதி விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அவதானம் செலுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் பிரிவு 34 (1) இன் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படும். அதன்படி, ஜனாதிபதியின் ஒப்புதலுடன், அந்தக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.

இருப்பினும், மேற்கூறிய சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் 2025-05-06 அன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட பொது மன்னிப்புக்கு தகுதியான கைதிகளின் பட்டியலில் 388 பெயர்கள் காணப்பட்டன. மேலும் அநுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட குறித்த நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அதாவது, ஜனாதிபதி பொது மன்னிப்புக்காக அங்கீகரித்த 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து விசேட விசாரணையை முன்னெடுக்கக் கோரி, ஜனாதிபதி செயலகத்தினால் நேற்று (06) “ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அங்கீகரிக்கப்படாத கைதியின் விடுதலை தொடர்பாக” என்ற தலைப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News