
ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களது வழக்கு விசாரணை இன்று
-யாழ் நிருபர்-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகைக்கு எதிராக, ஜனநாயக ரீதியில் போராடிய செயற்பாட்டாளர்களான எங்கள் மீதுஇ சட்டத்துக்கு புறம்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.
குறித்த வழக்கு இன்று புதன்கிழமை நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வழக்கில் ஆஜராகுவதற்காக நீதிமன்றிலே முற்பட்டிருந்தோம். மீண்டும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியிருக்கின்ற காரணத்தினால் அடுத்த வழக்கிற்கு ஒரு திகதி இடப்பட்டுள்ளது.
இந்த கைதுகள் அனைத்தும் சிங்கள பௌத்த பேரினவாதத்துடைய, தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய சட்டவிரோத கைதுகளுக்கு அஞ்சி, எங்களுடைய உரிமைப் போராட்டத்தை அடக்கலாம் என்று அரசோ அல்லது அரச இயந்திரங்களோ நினைக்கக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணதிற்கு வருகை தந்தபோது அவரது வருகைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக யாழ். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அடுத்த வழக்கானது 10.10.2023 அன்று திகதியிடப்பட்டுள்ளது.
