சேலையில் கழுத்து இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு
கந்தப்பளை – ஹைபொரஸ்ட் தோட்டத்தின் தனி குடியிருப்பு தொகுதியிலிருந்து உயிரிழந்த நிலையில் சிறுமியொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த, மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் இராஜமாணிக்கம் விசாந்தினி (காவியா) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரை கம்பத்தில் சேலை பட்டியில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தினத்தன்று, சிறுமி தனது வீட்டுக்கு முன்பாக உள்ள முற்றத்தில் விளையாடி கொண்டிருந்ததாகவும், அதன்போது தாய் மலசலகூடத்துக்கு சென்றிருந்ததாகவும், பின்னர் மலசலகூடத்திலிருந்து வெளியே வந்து பார்த்த போது, சிறுமியின் கழுத்து சேலையில் இறுகி உள்ளதை அவதானித்து, கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்ததாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் கழுத்தில் இறுகியிருந்த பட்டி அகற்றப்பட்டு, சிறுமி ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
