சூரியன் உதிக்க வேண்டிய தேவை உள்ளது என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்!

சூரியன் உதிக்க வேண்டிய தேவை உள்ளது என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர், எமது கட்சியானது தமிழ் இனத்திற்கு ஒரு அடையாளச் சின்னமாக மாற வேண்டும், என்று தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அருண்மொழிவர்மன் தம்பிமுத்து தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகக் கூடு;டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

புதிய அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியலுடன் பயணிக்கும் போது தான் நமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொடுக்க முடியாத நிலைமைகளும் ஏற்படுவதுண்டு.

அரசாங்கம் சொல்லுவதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் நிலைமை எமது அரசியல் தலைமைகளுக்கும் ஏற்பட்டிருக்கின்றது, கடந்த காலங்களில் உரிமைக்காக குரல் கொடுக்கிறோம் என்று கூறியவர்கள் மக்களின் தேவைகளை புறக்கணித்து வந்துள்ளார்கள்.

நாங்கள் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க வேண்டிய காலத்தில், கட்டாயத்தில் இருக்கின்றோம் மக்களை பாதிக்கின்ற விடயங்களை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூற வேண்டியவர்களாகவும் அதேவேளை மக்களின் தேவைகள் என்று வரும்போது அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க முடியும்.

அமைச்சர்களால் தான் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் மாற வேண்டும்.

இடம்பெற உள்ள இந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது சின்னம் சூரியன் உதிக்க வேண்டிய தேவை உள்ளது என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

தமது கட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் நாங்கள் ஒரு மாற்று சக்தியாக உருவெடுப்பதற்கு எமது கட்சியானது தமிழ்த் தேசிய இனத்திற்கு ஒரு அடையாளச் சின்னமாக மாற வேண்டும் என்றார்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மரியசெல்வம் ரொபட்டி நிக்சன், டானியல் சத்தியேந்திரா பாக்கியம், தர்சாந்தினி அமலநாதன், விநாயகலிங்கம் கஜநந்தன், ராஜேந்திரப்பிரசாத் வெலிங்ரன், பெனடிக் சிறிபாதம், பிலிப் ஜோன் முருகையா ஆகியோரும் உரையாற்றினர்.