
சுவர்கள் வெடித்து தாழிறங்கிய வீடு!
-நுவரெலியா நிருபர்-
நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, 476/ஏ கிரிமிட்டி கிராம சேவகர் பிரிவிலுள்ள மஹாஎலிய தோட்டத்தில், நேற்று வியாழக்கிழமை அதிகாலையில் தனி வீடு ஒன்று திடீரென்று தாழிறங்கியதுடன், தரை மற்றும் சுவர்களில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளது .
இதனால் அவ் வீட்டில் வசித்த நான்கு பேர் அடங்கிய குடும்பம், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான முதற்கட்ட உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
விடயம் தொடர்பில் தோட்ட முகாமையாளர், கிராம சேவகர் மற்றும் நானுஓயா பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டதுடன், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
வீட்டின் சுவர்கள் அனைத்திலும் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சமையலறை உட்பட இரண்டு அறைகள் முழுமையாக பாதிக்கபட்டுள்ளதாகவும், வீட்டினைச் சுற்றி நிலம் வெடித்துள்ளதுடன், நிலம் தாழிறங்கியுள்ளதாகவும், வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.