சுகாதார பணியாளர்களுக்கு 2வது தடவையாக எரிபொருள் விநியோகம்

-மன்னார் நிருபர்-

மன்னாரில் சுகாதார பணிப்பாளர்களுக்கு இன்று சனிக்கிழமை 2வது தடவையாக எரிபொருள் (பெற்றோல்) விநியோகிக்கப் பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஆகியோரின் ஏற்பாட்டில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணி மனையின் கீழ் பணிபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு இவ்வாறு எரிபொருள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் பிரச்சனை உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமது அத்தியாவசிய தேவைகளுக்கு எரிபொருள் வழங்க கோரி மன்னாரில் கடந்த 1ஆம் திகதி சுகாதார பணிப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளித்திருந்தனர்.

இந்நிலையில் சுகாதார ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் முதல் கட்டமாக கடந்த 2 ஆம் திகதி விசேட ஏற்பாட்டின் கீழ் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை 2 ஆவது தடவையாக சுகாதார பணிப்பாளர்களுக்கு பெற்றோல் வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் மேற்பார்வையில், கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எவ்வித தடங்கலும் இன்றி எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.