
சிறை சென்ற மஹிந்தானந்த நாடாளுமன்ற ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவார்?
கடுமையான பணியுடன் 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, எந்தவிதமான குறைப்புகளும் இல்லாமல் தனது நாடாளுமன்ற ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் அறிய முடிகிறது.
தண்டனை அனுபவிக்கும் எம்.பிகளின் ஓய்வூதியம் இழக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியச் சட்டத்தில் எந்தக் குறிப்பும் இல்லை.
இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பின்படி ஓய்வூதியம் நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டால், அது நிறுத்தப்பட வேண்டும்.
ஆனால், மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு அவ்வாறான உத்தரவுகள் எதுவும் இல்லாமையால் அவர் தொடர்ந்து ஓய்வூதியத்தை பெறுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
என்றாலும், மஹிந்தானந்த அளுத்கமகேவுடன் சிறை தண்டனையை அனுபவித்துவரும் முன்னாள் அமைச்சர் நளிந்த பெர்னாண்டோவுக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெறாதென தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் நிறைவு செய்துள்ளவர்களுக்கே ஓய்வூதியம் கிடைக்கப்பெறும். நளிந்த பெர்னாண்டோ நான்கரை ஆண்டுகள்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பதால் அவருக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கப்பெறாது.
