Last updated on January 18th, 2025 at 10:24 am

சிறீதரன் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினை தீர்த்க்கட்டும் யாழ். மீனவர் அமைப்பு

சிறீதரன் ஸ்டாலினுடன் பேசி மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும் : யாழ். மீனவர் அமைப்பு சவால்!

-யாழ் நிருபர்-

முடிந்தால் கிளிநொச்சியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழக முதலமைச்சருடன் கதைப்பதற்கு நேரத்தினைப் பெற்று, அவருடன் கலந்துரையாடி எமது மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும், அதன் பின்னர் நாங்கள் அவரது செயற்பாடுகளை வரவேற்கின்றோம் என யாழ்ப்பாண மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்துள்ளார்.

சம்மேளனத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது எமது கடற்தொழில் அமைச்சராக உள்ள சந்திரசேகரன் அவர்களுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் கதைப்பதற்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் அவர்கள் அதனை சரியாக பயன்படுத்தவில்லை.

அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கு இருந்த போதே இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறாமல் இங்கு வந்தபின்னர், முதலமைச்சருடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு தான் கேட்டுள்ளதாகவும், மீனவர்களின் பிரச்சினைகளை கதைக்கப்போவதாகவும் கூறுகின்றார். இதெல்லாம் பகட்டுக்கும், எதிர்காலத்தில் மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவும் கூறுகின்றார்.

இந்தியாவில் தேர்தல் நெருங்குகின்றது. தேர்தல் காலத்தில் உங்களுக்கு நேரம் ஒதுக்கி தர மாட்டார்கள். இயலும் என்றால் நீங்கள் நேரத்தினை பெற்று நமது மீனவர்களின் பிரச்சினை குறித்து பேசித் தீருங்கள், அதற்கு பின்னர் நாங்கள் உங்களை வரவேற்கின்றோம்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கதைப்பதற்கு, கடந்த காலத்தில் கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடமும் கோரிக்கை முன்வைத்தோம் இதன்போது அவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்தார். இருப்பினும் எமக்கான நேரம் வழங்கப்படவில்லை. அப்படி எமக்கு நேரம் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் எமது பிரச்சினைகளை நேரடியாகவே எடுத்துக்கூறி இருப்போம், என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்