சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில், தரம் 01 முதல் 05 வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை மருத்துவ பரிசோதனை இன்று பாடசாலை அதிபர் எம்.எச். நுஸ்ரத் நெறிப்படுத்தலில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மாணவர்களின் உடற்திணிவு, வாய்ச் சுகாதாரம், இதய சம்பந்தமான பிரச்சினைகள், தோல் நோய்கள், பேச்சுத் திறன், கேட்கும் திறன், விசேட நடத்தைகள், நுரையீரல் பரிசோதனை மற்றும் கண்பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சுகாதார அம்சங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

இப்பரிசோதனை நடவடிக்கைகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை பற்சிகிச்சையாளர் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சேவையாற்றினர்.

பரிசோதனைகளின் போது மாணவர்களிடையே காணப்பட்ட சுகாதார குறைபாடுகள் இனங்காணப்பட்டதுடன், அவற்றிற்கு மேலதிக சிகிச்சைகள் வழங்குவதற்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.