சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களின் வித்தியாரம்ப விழா
சாய்ந்தமருது கமு/கமு/ அல்ஹிலால் வித்தியாலயத்தில் தரம்-01 மாணவர்களின் “ஆரம்ப கல்விக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்பம் செய்யும் வித்தியாரம்ப விழா கடந்த வியாழக்கிழமை காலை வெகு விமர்சையாக பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாடசாலை கல்வி சமூகத்தின் ஏற்பாட்டில், பாடசாலையின் அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மகப்பேற்று மற்றும் பெண்கள் வைத்திய நிபுணர் வைத்தியர் எச்.எம். றசீன் முஹம்மட் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத், இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் ‘அதிபர் திலகம்’ யூ.எல்.நசார், கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி வளவாளர் எஸ்.எம்.எம். அன்சார் மற்றும் பாடசாலையின் முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத் ஆகியோர் நிகழ்வில் சிறப்பதிதிகளாகக் கலந்து சிறப்பித்ததோடு, ட்ரவுன் ட்ரவல்ஸ் பணிப்பாளர் ஏ.ஜே.எம். ஜலீல், சமீம் டெக்ஸ் பணிப்பாளர் ஏ.எம். சமீம் ஆகியோர் விசேட அழைப்பாளர்களாகவும் கலந்து கொண்டு தரம் 1 மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக வித்தியாரம்பம் செய்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது தரம் – 2 மாணவர்களால் இவ்வாண்டு தரம் – 1 இற்கு இணைக்கப்பட்ட மாணவர்களை மாலை அணிவித்தும் இணைப்புப் பண்டங்கள் வழங்கியும் வரவேற்றனர்.
இதன்போது பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் நலன் விரும்பிகள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.





