
சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் விசேட பொங்கல் நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
சர்வதேச நீர் தினமான இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 22) தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியின் விவசாயிகளால் விசேட பூசை நிகழ்வு வெம்பு பகுதி வயல் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டது.
கடும் மழையுடனான கால நிலையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த நிகழ்வினை தம்பலகாமம் பிரதேச விவசாய சம்மேளனங்கள், பிரதேச செயலகம், கமநல அபிவிருத்தி திணைக்களம், நீர்பாசன திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த வயல் வெளிக்கு அருகாமையில் உள்ள பிச்சைவெளி ஆற்று ஓடையில் பூஜை மேற்கொள்ளப்பட்டதுடன் மிக நீண்ட நாட்களின் பின் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி வெளியிட்டனர்.
இதன் போது பொங்கல் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டு விசேட பூஜையும் இடம் பெற்றதுடன் பொங்கலும் பகிரப்பட்டது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி, நீர்ப்பாசன திணைக்களத்தின் கந்தளாய் பிரதேச பொறியியலாளர் எஸ்.ஏ.சி.எஸ்.சுர வீர உட்பட கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகஸ்தர்கள், விவசாய சம்மேளனங்களின் உறுப்பினர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


