சமுர்த்தி சமூதாய அமைப்பின் மாவட்ட குழுவிற்கான இரண்டாம் காலாண்டு கூட்டம்!
-மட்டக்களப்பு நிருபர்-
சமுர்த்தி சமூதாய அமைப்பின் மாவட்ட குழுவிற்கான இரண்டாம் காலாண்டுக்கான கூட்டமானது மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
சமுர்த்தி சமூதாய அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை ஆராய்ந்ததுடன், எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்கான கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றது.
மாவட்டத்தில் 2020 சமூதாய அடிப்படை அமைப்புக்கள் தொழிற்பட்டு வருகின்ற நிலையில், இவ் அமைப்புக்கள் மூலம் மாவட்டத்திலிருந்து வறுமையைப் போக்குவதற்குத் தேவையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் போது, கருத்துத் தெரிவித்த மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் சமுர்த்தி வங்கிகளின் மூலம் இலகு கடன்களால் தமது தொழில்வாய்ப்பை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்பதுடன், சமுதாய அடிப்படை அமைப்புக்களிலிருந்து பெறப்பட்ட நிதியிலிருந்து வறிய ஐந்தாம் தரத்திற்கு உட்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் சிறப்பாக ஈடுபடுத்துவதற்கு அப்பியாசக் கொப்பிகள் எதிர்வரும் காலங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளோம் என்றார்.
இந் நிகழ்வில் சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் மனோகிதராஜ், மாவட்ட சமுர்த்தி சமூதாய அடிப்படை அமைப்பிற்கு பொறுப்பான முகாமையாளர், சமுர்த்தி வங்கி சங்கங்களின் முகாமையாளர்கள், பிரதேச சமூதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் சமூதாய அடிப்படை அமைப்புகளுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்