சந்தையில் எகிறியது மீன்களின் விலை
கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் சத்தியாகிரக போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கடந்த 8 நாட்களாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தநிலையில், சந்தைக்கு வரும் மீன்களின் அளவு குறைவடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் விளைவாக மீன்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் ஓரளவு உயர்ந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதற்கமைய, பேலியகொடை மீன் சந்தையில் தோரா மீன் மூவாயிரத்து 600 ரூபாய்க்கும், பாறை மீன் மூவாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கெலவல்லா மீன் 2 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், பலயா மீன் 2 ஆயிரம் ரூபாய்க்கும், லின்னா மீன் 900 ரூபாய்க்கும், சாளை மீன் 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடற்றொழிலாளர்களின் இந்தப் போராட்டம் தொடர்ந்து நீடித்தால், எதிர்வரும் நாட்களில் மீன்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
