சந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் கூடிய 19 நபர்கள் கைது!

-மூதூர் நிருபர்-

சந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் ஒன்று கூடிய 19 நபர்கள் சனிக்கிழமை மாலை மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கூரிய வாள்கள்,ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில் ஒரு குழுவினர் ஒன்று கூடுவதாக மூதூர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பிரகாரம் மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக தோப்பூர் காவலன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எப்.எம்.றமீஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டினை முற்றுகையிட்டனர்.

இதன்போது 19 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 4 கூரிய வாள்கள், 2520 மில்லிகிராம்,2300 மில்லிகிராம் நிறையுடைய இரண்டு ஐஸ் போதைப் பொருள் பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஈச்சிலம்பற்று,தோப்பூர்,மூதூர்,பச்சநூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதுடன் இவர்களை மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.