சந்தேகத்தின் விளைவு : மனைவியை அடித்து கொன்ற கணவன்!

இந்தியாவில் நபர் ஒருவர் தனது மனைவியை அடித்தே கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழகம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான துரை (வயது 47).

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு மேல்புழுதியூர் பகுதியைச் சேர்ந்த தாட்சாயினி என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவர் உள்ளார்.

இதற்கிடையே துரை வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறி, அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு வந்ததாக கூறப்படுகிறது.

மனைவி இவ்வாறு தன்னை கண்டிப்பதால் ஆத்திரமடைந்த கணவன், கட்டையால் மனைவியின் தலையில் அடித்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் அவ்விடத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார்.

தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் தன் மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், அவரது கணவர் தான் அடித்துக் கொலை செய்திருக்க கூடும் என மேல்செங்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தலைமறைவான துரையை கைது செய்து, பொலிஸார் விசாரணை செய்த போது, தன் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் அருகில் இருந்த கட்டையால் அடித்து கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.