சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு
-யாழ் நிருபர்-
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இன்று புதன்கிழமை மு.ப.08.04 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றமைமைத் தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் இணைய வழி ஊடாக தேசிய நிகழ்வுகளோடு உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்திருந்தனர்.
செயலக உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதேச செயலாளர், சுதந்திர தினம் தொடர்பான வரலாற்று ரீதியான விடயங்களை குறிப்பிட்டு, பிரதேச செயலகத்தில் கருவிலுள்ள குழந்கைகள் நலனைக் கவனிப்பது தொடங்கி, முதியோர் சேவை ஈறாக ஒவ்வோரு துறை சார்ந்தும் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கிராம மட்டத்தில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றுபட்டு பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பணியாற்றுவதோடு,
நீங்களும் மகிழ்ச்சியுடன் மேம்பட்ட எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்விலே செப்ரெம்பர் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரை காலை 8.30 முன்னர் வருகை தந்த உத்தியோகத்தர்களில் முதல் மூன்று நிலைகளிலுள்ள உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பும், முதியோர் செயலக செயற்பாடுகளில் அர்ப்பணிப்பாக பணியாற்றிய உத்தியோகத்தருக்கு அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்ட மெச்சுரை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
நிறைவாக செயலக வளாகத்தில் சிரமதானம் மற்றும் மரநடுகை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
