
சட்ட விதிகளை பின்பற்றாத இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
-அம்பாறை நிருபர்-
சட்ட விதிகளை பின்பற்றாத இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக, அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய, அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை, இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை பகுதியில் உள்ள, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்ட விதிகளை பின்பற்றாத இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராகவே இச்சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இறைச்சி விற்பனை செய்யும் வியாபார நிலையங்களில் விலை காட்சிப்படுத்தாமை, தராசு முத்திரை இடாது நுகர்வோரை ஏமாற்றும் நோக்கத்துடன் விபாயார நடவடிக்கையை மேற்கொண்டமை உள்ளிட்ட விடயங்களுக்காக குறித்த வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
விசேட சுற்றி வளைப்பில், அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை புலனாய்வு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்
