சட்டவிரோத வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 75 வெளிநாட்டவர்கள் கைது

இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து, சட்டவிரோத வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 75 வெளிநாட்டவர்கள் கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 15 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி சுற்றுலா வலயங்களில் பதிவு செய்யப்படாத உணவகங்கள், விருந்தினர் விடுதிகள் மற்றும் தங்குமிட வசதிகளை நடத்துதல் போன்ற வணிக நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக கரையோரப் பகுதிகளான உனவடுன மற்றும் காலி போன்ற இடங்களில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளன.

வெளிநாட்டவர்கள் இச்சட்டவிரோத செயற்களில் ஈடுபட உள்ளூர் நபர்களைப் பயன்படுத்திக் கொள்வது விசாரணைகளுக்கு பெரும் சவாலாக இருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுற்றுலா விசா விதிமுறைகளை மீறி கடற்கரை ஓரங்களில் சிறு வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கடந்த ஆண்டு கடற்கரையில் சிறிய ஆபரணங்களை விற்பனை செய்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதை காவல்துறை சுற்றுலாப் பிரிவின் பதில் பணிப்பாளர் ஏ.எஸ்.பி பிரபாத் விதானகம சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலா வலயங்களில் இவ்வாறான சந்தேகத்திற்கிடமான சட்டவிரோத வணிக நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிந்தால், 1912 என்ற துரித இலக்கத்திற்கு அல்லது அந்தந்த பகுதிகளில் உள்ள சுற்றுலா காவல்துறை பிரிவுகளுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.