
சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த கும்பலை எச்சரித்து அனுப்பிய யாழ். பொலிஸார்!
-யாழ் நிருபர்-
நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் விரட்டியடிக்கப்பட்டது.
இவ்வாறு நிதி சேகரிக்க வந்த குழுவில் உள்ளவர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள் உள்ளதாகவும், அவற்றுக்கு சிகிச்சை செய்வதற்கு பாரியளவு நிதி தேவை என்றும் பொய்கூறி, வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், குறித்த கும்பல் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வந்தது.
இது குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த குழுவில் இருந்த மூவரையும் அழைத்துச் சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இனிமேல் இவ்வாறான சட்டவிரோத நிதி சேகரிப்பில் ஈடுபடக்கூடாது, என கடுமையாக எச்சரித்த பின்னர் பொலிஸார் அவர்களை விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
