
சடலத்திற்கு உயிர் வந்த அதிசயம்
இறந்து விட்டதாக கூறிய நபரின் உடல் குண்டும் குழியுமான சாலையில் ஆம்புலன்சில் கொண்டு வரும்போது அவர் உயிர்பிழைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலத்தை சேர்ந்த 80 வயதான தர்ஷன் சிங் ப்ரார் என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவரின் உடல் ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்ட போது ஆம்புலன்சில் தர்ஷன் சிங்கின் பேரனும் உடனிருந்துள்ளார்.
உடல் ஆம்புலன்சில் கொண்டு வரப்படும்போதே, உறவினர்கள் வீட்டில் குவிந்து இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.
இவ்வாறான நிலையில் மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது, திடீரென பள்ளத்தில் விழுந்து எழுந்தது. அப்போது தர்ஷன் சிங்கின் உடல் லேசாக அசைவது போல இருந்தது. இதனை பார்த்த பேரன் பள்ளத்தில் விழுந்ததால் அசைவு ஏற்பட்டிருக்கும் என்று பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பின்னர் மீண்டும் கை கால்கள் அசைந்துள்ளது. அப்போது ஒரு நிமிடம் வியப்புடன் பார்த்த அவரது பேரன் இதயத்துடிப்பு இருப்பதையும் கவனித்தார்.
உடனடியாக ஆம்புலன்ஸை மருத்துவமனைக்கு திருப்ப வைத்தார். அங்கு தர்ஷன் சிங்கை மருத்துவர்கள் பரிசோதித்தபோது உயிர் இருந்துள்ளது.
இந்த தகவலை கேட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் அவரின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு அதிசயம்தான் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
