கோவில் திருவிழா வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – கந்தர்மடம் வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை தீ விபத்துக்குள்ளாகி உள்ளது.

குறித்த வீதியில் உள்ள வைரவர் ஆலயத்தின் அலங்காரத் திருவிழா இடம்பெற்று வருகிறது.

கடந்த வியாழக்கிழமை சுவாமி வெளிவீதியுலாவின் போது வானவேடிக்கைகள் இடம்பெற்ற போது, அதிலிருந்து பறந்த தீப்பொறி அரங்காலய மேற்கூரையில் பட்டு எரிந்துள்ளது.

இதனைப் பார்த்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கும், பொலிசாருக்கும், அரங்காலய நிர்வாகத்தினருக்கும் அறிவித்துள்ளனர்.

அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போதும் கிடுகு ஓலைகள் முழுவதும் எரிந்ததுடன், மேற்கூரை மரங்கள், இலத்திரனியல் பொருள்கள், கதிரைகள் உள்ளிட்ட தளபாடங்களும் பகுதியளவில் தீயினால் சேதமடைந்தன.

இதனையடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு மேலதிக நடவடிக்கைக்காக பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தினரிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

ஆலயங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் வான வேடிக்கைகள் நிகழ்த்துபவர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பண்பாட்டு மலச்சிக் கூடத்தில் பல்வேறு சமூக செயற்பாட்டு நிகழ்வுகளும், அரங்க செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க