கொட்டும் மழையிலும் 18 ஆவது நாளாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக கொட்டும் மழையிலும் இன்று சனிக்கிழமை 18 ஆவது நாட்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாங்கள் 53 வருடங்களாக விவசாயம் செய்து வந்த விவசாய நிலத்தை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக இலங்கை துறை முக அதிகார சபையின் காணி என அப்பட்டமாக வழங்கி வைக்கப்பட்டதையடுத்து இதனை மீளப் பெறக் கோரி இதனை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த முத்து நகர் விவசாய காணியில் சுமார் 800 ஏக்கர் அளவில் நில அபகரிப்பு செய்யப்பட்டு இருநூறு ஏக்கருக்கும் மேல் தற்போது சுத்தமாக்கப்பட்டு விவசாய குளங்களை மூடிய நிலையில் சூரிய மின் சக்திக்காக கையகப்படுத்தியுள்ளனர்.

இதனால் விவசாயத்தை நம்பிய நிலையில் தாங்கள் மேற்கொண்ட ஜீவனோபாயமான விவசாய செய்கை முழுதும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் இவ் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் இணைந்து “முத்து நகர் விவசாயிகளின் போராட்டத்திற்கு நாமும் ஒன்றினைவோம்” போன்ற பதாகையினையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் விவசாய பூமியை பெற்றுத் தரக் கோரி பல போராட்டங்களை ஜனாதிபதி செயலகம் தொடக்கம் பிரதம மந்திரி அலுவலகம் வரை போராடிய விவசாயிகளுக்கு இற்றை வரைக்கும் தீர்வு கிட்டவில்லை என தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இறுதியாக பிரதமர் அலுவலகம் முன் இடம் பெற்ற போராட்டத்தின் போது பிரதமர் தங்களுக்கு பத்து நாட்களுக்குல் தீர்வு வழங்குவதாக கூறியும் இன்னும் வழங்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

அரசே எங்களுக்கு சோறு போடும் நிலத்தை மீட்டுத்தா, விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு ,இந்திய கம்பனிகளின் நில மற்றும் வள திருட்டுக்கு எதிரான போராட்டத்தை தொடங்குவோம் போன்ற வாசகங்களையும் ஏந்தியவாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.