
கையிருப்பில் உள்ள பெற்றோலை அடுத்த வாரம் வரை முகாமை செய்ய முடியாது
நாளாந்த கேள்விக்கு அவசியமான அளவு பெற்றோல் மற்றும் டீசலை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாளொன்றுக்கு 3,000 மெட்ரிக் டன் டீசல், 2,600 மெற்றிக் டன் பெற்றோல் என்ற வரையறையில் விநியோகிக்கப்படுகிறது.
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுடன் தற்போது கையிருப்பில் உள்ள டீசல் தொகையை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை முகாமை செய்ய முடியும், எனவே டீசல் விநியோகத்தை அவ்வாறே தொடர்ச்சியாக முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.
கையிருப்பில் உள்ள பெற்றோலை 21 ஆம் திகதிவரை முகாமை செய்ய முடியாது.
நேற்று முன்தினம் கூடிய அமைச்சரவை உபகுழு நாட்டுக்கு அவசியமான பெற்றோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய மேலும் 2 நிறுவங்களுடன் ஒப்பந்தங்களை செய்ய அனுமதி வழங்கியது.
அந்த நிறுவனங்களுக்கு நாணயக் கடிதங்களை விடுவிப்பது மக்கள் வங்கி ஊடாக இடம்பெறும்.
அந்த நாணய கடிதங்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னர், அடுத்த எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் திகதியை குறிப்பிட முடியும்.
மார்ச் மாதம் முதல் எரிபொருள் தொகையை எடுத்துக் கொண்டால் தங்களது கையிருப்பை விடவும் அதிக தொகை நாட்டின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்களிடம் உள்ளது.
இதுதான் இருக்கின்ற பாரிய பிரச்சினையாகும்.
உதாரணமாக போக்குவரத்துத் துறையில் பெரும்பாலானோர் மண்ணெண்ணெயை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகின்றனர்.
டீசல் விலை அதிகரிக்கும் போது பேருந்து கட்டணத்தை அதிகரிக்கின்றனர்.
ஆனால், மண்ணெண்ணெயை பயன்படுத்தி பேருந்துகள் இயக்கப்படுகின்றது என, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
