குடும்பப் பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்பு!

 

-அம்பாறை நிருபர்-

வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணின் சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரினால் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், தனித்திருந்த 37 வயது மதிக்கத்தக்க பெண்ணே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது, கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக, ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிipழந்த குடும்ப பெண்ணின் கணவர், வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கியுள்ளதாகவும், கொலை இடம்பெற்ற போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR), கொலையாளியினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலை தொடர்பில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்பார்வை செய்ததுடன், அம்பாறை தடயவியல் பொலிஸார் உட்பட பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.