குடிநீர் இல்லாமையால் சிறுநீரக நோய்க்கு உள்ளாகும் சிறார்கள்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட நொச்சிக்குளம் பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரின்றி அவதியுற்று வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வதற்கு திரியாய் சந்தி மற்றும் சாந்திபுரம் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் இல்லாமையினால் தூர இடத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், சுத்தமான குடிநீருக்கு பதிலாக கிணற்று நீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சிறுவர்களுக்கு சலக் கடுப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதே வேளை, சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வதற்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து செல்வதாகவும், எவருடைய உதவியும் கிடைப்பதில்லை எனவும் பாதிக்கப்பட்ட தாயொருவர் குறிப்பிட்டார்.

நொச்சிக்குளத்தில் இரண்டு பொதுக்கிணறுகள் காணப்படுவதாகவும், கோடை காலங்களில் கூட இக்கிணறு வற்றுவதில்லை எனவும் இக் கிணற்றினை குடிப்பதற்கு வடிகட்டி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, சுத்தமான குடிநீர் இல்லாமையினால் அதிகளவிலான மக்களுக்கு சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் சிறார்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அரசாங்கம் சுத்தமான குடிநீரை பெற்று தருவதற்குரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் எனவும் நொச்சிக்குளம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.