
கிழக்கு ஆளுநருக்கு தொப்பி அளவானால் அவர் போட்டுக் கொள்ளட்டும்
திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் ஊழல் தொடர்பில் ஊடகங்களுக்கு தாம் வெளியிட்ட கருத்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு அவதூறு விளைவித்ததாக தெரிவித்து, தமக்கும் சக நண்பர்களுக்கும் எதிராக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில கிழக்கு மாகாண ஆளுநர் சார்பில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில நேற்று திங்கட்கிழமை வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி, வீண் விரயம், அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் ஆளுநருக்கு எவ்வாறு அவதூறு விளைவிக்கும் என்பது தொடர்பில் எமக்கு தெரியாது, நாங்கள் தெரிவித்த கருத்துக்களுக்கும் ஆளுநருக்கும் தொடர்பு இருக்குமாயின் “தொப்பி யாருக்கு அளவோ அவர் போட்டுக் கொள்ளட்டும்” .
எது எவ்வாறு இருப்பினும் நாங்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் மன்னிப்பு கோரவோ, மண்டியிடவோ முடியாது. அவர்களுக்கு வேண்டுமென்றால் சட்டரீதியான எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ள முடியும்.
இது தொடர்பில் நாங்கள் நீதிமன்றத்தை நாடவும் தயாராக உள்ளோம், நாங்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறோம், பொலிஸ் விசாரணையில் எமது நிலைப்பாட்டினை தெளிவாக கூறியிருக்கிறோம், என அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்