கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.சங்கானையில் நடைபெற்ற நடமாடும் சேவை!

-யாழ் நிருபர்-

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகமும் வலிகாமம் மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்துகின்ற நடமாடும் சேவை இன்று செவ்வாய்க்கிழமை சங்கானைப் பிரதேச செயலகத்தில் காலை 8.30 தொடக்கம் மாலை 3.00 மணிவரை இடம்பெற்றது.

இந்த நடமாடும் சேவையில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ), சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் – பொது மருத்துவ பரிசோதனை, கண்புரை பரிசோதனை (Cataract), இலவச மூக்குக்கண்ணாடி வழங்குதல் (வறியவர்களுக்கு) போன்ற சேவைகள் இந்த நடமாடும் சேவையின்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடமாடும் சேவையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சேவையை பெற்றமை குறிப்பிடத்தக்கது.