கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

யாழ். செம்மணியில் இராணுவத்தால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு செம்மணி சந்தி பகுதியில் இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேநேரம் “வாசலிலே கிருசாந்தி” எனும் செம்மொழி தொடர்பான கவிதை நூலும் வெளியிடப்பட்டது.

இந்நினைவேந்தலில் தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.