காலி – ஹினிதும பகுதியில் கடுமையான பாதுகாப்பு!

காலி – ஹினிதும பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொலைபேசி தரவு பகுப்பாய்வு மற்றும் சிசிடிவி காணொளி காட்சிகளின் ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் அம்பலங்கொடை, படபொல பகுதியைச் சேர்ந்த நெவில் என்பவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் இஸ்ரேலுக்குப் பயணிப்பதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும் அதற்காக இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றுமொரு நபரான விடுதியின் உரிமையாளருக்குப் பணம் வழங்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதற்கமைய குறித்த நபர் விடுதியின் உரிமையாளருக்கு 1,200,000 ரூபாய் பணம் வழங்கியுள்ளார்.

எனினும் குறித்த தொகையில் 200,000ரூபாய் பணம் மாத்திரமே விடுதியின் உரிமையாளரால் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தவிடயம் தொடர்பில் குறித்த இருவருக்கும் இடையே ஒரு வாரத்துக்கு முன்னர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதுடன், இது குறித்து கலந்துரையாடுவதற்காக நடைபெற்ற மது விருந்தின் போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.