
காத்தான்குடியில் 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு
காத்தான்குடியில் 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு
-காத்தான்குடி நிருபர்-
காத்தான்குடியை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் காத்தான்குடி-05 ஊர் வீதியைச் சேர்ந்த அனஸ் சூலைமான் அப்துல்லா ( வயது-6) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
இன்று காலை வீட்டிலிருந்து தனியாக இருந்த சிறுவன் வீட்டைவிட்டு வெளியேறி வீட்டிற்கு பின்னால் ஆற்றங்கரை பகுதியை நோக்கி நடந்த சென்று கரையில் நின்றபோது ஆற்றில் விழுந்துள்ளதாக ஆரம்ப கட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருப்பதை அவதானித்த பெற்றோர் அருகாமை உறவினர்கள் மற்றும் பகுதி மக்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தை அண்மித்து பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெரா காட்சிகள் பார்வையிட்ட போது. இதில், ஆற்றை அண்மித்து அமைந்துள்ள கமெராக்களில் சிறுவன் தனியாக நடந்து செல்வது மற்றும் ஆற்றங்கரையை நோக்கிச் செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தன.
இதையடுத்து பிரதேச மக்கள், ஆற்றில் தீவிர தேடுதல்களை மேற்கொண்டனர். தேடுதலின்போது, சிறுவன் உயிரிழந்த நிலையில் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
