காதலனை கரம் பிடிக்க தன் மொத்த குடும்பத்தையே கொலை செய்த இளம்பெண்!

காதலனை கரம்பிடிப்பதற்காக  இளம்பெண்ணொருவர் தன் குடும்பத்தினரை கொலை செய்த சம்பவம்  பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் – கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்குக் கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 13 பேரும் உயிரிழந்தனர்.

பிரேதப் பரிசோதனையில் அவர்கள் உட்கொண்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

இதுதொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்திய போது, அதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார், அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த இளைஞரைத் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது குடும்பத்தையே கொல்லும் முடிவை எடுத்த அந்த இளம்பெண், இதற்கான திட்டத்தைத் தனது காதலன் யோசனைப்படி அரங்கேற்றியுள்ளார்.

வீட்டில் ரொட்டி சமைக்கப் பயன்படுத்தும் கோதுமை மாவில் விஷத்தைக் கலந்துள்ளார்.

இது தெரியாமல் சம்பவத்தன்று விஷம் கலந்த கோதுமை மாவில் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், ரொட்டி சமைத்து அதனை உட்கொண்டு அனைவரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து, குறித்த இளம்பெண்ணை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்