காணியை விவசாயிகளுக்கு வழங்குமாறு கோரி கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்!
-மன்னார் நிருபர் –
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இலுப்பைக்கடவை பகுதியிலுள்ள சோழமண்டல குளம் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியை கடந்த 30 ஆண்டுகளாக நூறு ஏழை விவசாயிகள் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் குறித்த காணியை உரிய விவசாயிகளுக்கு வழங்க கோரி இன்றைய தினம் வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடும் மழைக்கு மத்தியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இலுப்பைக் கடவையில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் கலந்து கொண்டிருந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் திணைக்களமே ஏழைகளின் எதிரியா?,அரச அதிகாரிகளே காணி மாபியாக்களின் கூட்டாளிகளா?,ஏழை விவசாயிகளை ஏமாற்றாதீர்கள்,எமது நிளம் எமக்கு வேண்டும்,வெளிநாட்டவர்களுக்கும்,கொழும்பில் உள்ளவர்களுக்கும் எமது காணியை வழங்களாமா?,உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் குறித்த பதாதைகளில் காட்சிப்படுத்தப்பட்டது.
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இலுப்பைக்கடவை பகுதியிலுள்ள சோழமண்டல குளம் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியை கடந்த 30 ஆண்டுகளாக நூறு ஏழை விவசாயிகள் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு காணிக்குறிய ஆவணத்தை வழங்காமல் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு காணி வழங்கியுள்ளதால் உள்ளூர் ஏழை விவசாயிகள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
இக் காணி விடயம் தொடர்பாக பல வருடங்களாக பல கூட்டங்கள் நடத்தியும் கடிதங்கள் எழுதியும் பெயர் பட்டியல்கள் தயாரித்து முறைப்படி பிரதேச செயலாளரால் வழங்கியும் பயன் கிடைக்கவில்லை.
இறுதியாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக 250 ஏக்கர் காணியில் 200 ஏக்கர் காணியை 100 விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் வீதமும் மீதி 50 ஏக்கர் காணியை வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 10 நபர்களுக்கும் பிரித்து வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
இத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேர்தல் திணைக்களம் அனுமதி வழங்க மறுக்கிறது.காலபோகம் பயிர்ச்செய்கை குரிய காலம் தொடங்கியுள்ளதால் உடனடியாக இந்த காணியை பிரித்து வழங்க வேண்டியது அவசியமாகும்.
இது நீண்ட காலமாக தொடர் நடவடிக்கையில் இருந்த விடயம் என்பதால் தேர்தல் திணைக்களம் இலகுவாகவே அனுமதி வழங்க முடியும் .ஆகவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தாங்கள் இவ்விடயத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு சென்ற மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிலையில் , ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விற்கு எழுதிய கடிதத்தை அரச அதிபரிடம் கையளித்தனர்.